சித்திரை புத்தாண்டு ஏன் கொண்டாடப்படுகிறது

Last updated on August 1st, 2023 at 10:45 pm

சித்திரை புத்தாண்டு தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் முக்கியமான ஒன்று. உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சித்திரைப் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

எந்தவொரு பண்டிகையை எடுத்துக்கொண்டாலும் அது கொண்டாடப்படுவதற்கு அடிப்படையான காரணம் ஒன்று இருக்கும். அந்த வகையில் சித்திரை புத்தாண்டு ஏன் கொண்டாடப்படுகின்றது, சித்திரை புத்தாண்டு கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன? என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

உலகிற்கு பொதுவாக தை மாதம் முதலாம் திகதி வருடத்தின் ஆரம்ப நாளாக இருந்தாலும், உலகில் பல்வேறு இனங்களுக்கும்/சமயங்களுக்கும் அவர்களுக்கான தனித்துவமான நாட்காட்டிகளின் அடிப்படையில் வருடத்தின் ஆரம்பம் வேறு வேறு மாதங்களாக இருக்கும்.

உதாரணமாக, லூனார் (Lunar) நாட்காட்டியில் மாசியில் வருடம் ஆரம்பிப்பதாகவும், நவ்ரூஸ் (Nowruz) எனும் நாட்காட்டியில் பங்குனியில் வருடம் ஆரம்பிப்பதாகவும், என்குடதாஸ் (Enkutatash) எனும் எதியோப்பியன் நாட்காட்டியில் புரட்டாதியில் வருடம் ஆரம்பிப்பதாகவும் உள்ளது.

அந்தவகையில் தமிழர்களின் நாட்காட்டியின் படி சித்திரை மாதம் வருடத்தின் முதல் மாதமாக கருதப்படுவதால் சித்திரை புதுவருடமாக கொண்டாடப்படுகின்றது.

சூரியனையும், 12 ராசிகளையும் வைத்து கணிக்கப்படுகின்ற நாட்காட்டியின் அடிப்படையில் இறுதி ராசியான மீனத்திலிருந்து சூரியன் வெளியேறி ஆரம்ப ராசியான மேடத்திற்கு சூரியன் பிரவேசிப்பதை அடிப்படையாகக் கொண்டு புத்தாண்டு பிறக்கும் காலம், நேரம் தீர்மானிக்கப்படுகின்றது.

புதிய வருடத்தை வரவேற்பதற்காகவும், புத்துணர்வுடன் புதிய வருடத்தை ஆரம்பிப்பதையும் நோக்கமாகக் கொண்டு புதுவருடம் கொண்டாடப்படுகின்றது.

ஆனால், இன்றுவரை தமிழர்களுடைய புத்தாண்டு சித்திரை மாதமா? தை மாதமா? என்பதில் நிறையவே முரண்பாடுகள் நிலவுகின்றன.

இந்தப் பிரச்சினை இன்று அல்ல. நீண்ட காலமாகவே தமிழர்களின் புத்தாண்டு எது? என்பதில் இரு வகையான கருத்துக்களும் இருந்திருக்கின்றது. இந்த பிரச்சினைக்கு தீர்வாக, 1921 இல் மறைமலை அடிகளார் தலைமையில் கூடிய சபையில் தை மாதம் முதலாம் திகதியே தமிழர்கள் புத்தாண்டு என தீர்மானிக்கப்பட்டது.

ஆங்கிலத்தில் கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்கு பின் என இயேசு கிறிஸ்துவின் காலத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ஆங்கில நாட்காட்டிதான் தற்போது புழக்கத்தில் உள்ளது.

அதே போலவே தமிழருக்கென தனித்துவமான நாட்காட்டி தேவை என்பதாலே திருவள்ளுவரை அடிப்படையாக வைத்து ஒரு நாட்காட்டியை உருவாக்கினார்கள். திருவள்ளுவர் நாட்காட்டியில் சித்திரை புத்தாண்டு ஆண்டின் தொடக்கமாக இல்லாமல் தை மாதம் தொடக்கமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் மத்தியில் தை மாதம் மிக மிக நீண்ட காலமாகவே சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கின்றது. சங்க கால தமிழ் பாடல்களில் தை மாதத்திற்கு கொடுத்திருக்கின்ற சிறப்பு வேறு எந்தவொரு மாதத்திற்கும் கொடுக்கப்படவில்லை. அந்த பாடல்களை கருத்தில் வைத்து தை மாதம்தான் தமிழர்களின் ஆரம்ப மாதமாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

பாவேந்தர் பாரதிதாசனும் அவருடைய பாடலிலேயே சித்திரைபுத்தாண்டு ஆரியர்களால் திணிக்கப்பட்டது என்று கூறி “சித்திரை அல்ல உனக்கு தமிழ் புத்தாண்டு” என்று பாடியிருக்கின்றார்.

இதே போன்று சித்திரை தமிழர்களுடைய புத்தாண்டு அல்ல என நிறைய கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன அதே நேரம் சித்திரை மாதம்தான் தமிழ் புத்தாண்டு என்றும் பலர் கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.

எது எப்படியாயினும் சித்திரைப் புத்தாண்டு என்று சொல்லும் போது ஒர் மகிழ்ச்சியான கொண்டாட்ட உணர்வு ஏற்படுகின்றது. ஆகவே அதனை நாம் சந்தோஷமாக கொண்டாடலாம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

2 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading