பெறுமதியான உணர்வுகளும் அனுபவங்களும்

Last updated on January 10th, 2024 at 09:09 pm

உலகிலே பெறுமதியானது என்னவென்று கேட்டால் நேரம் என்பது பொதுவாக எல்லோராலும் சொல்லப்படும் கருத்து. அது உண்மையான விடயமும் கூட. நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தை தவறவிட்டுவிட்டால் அதே போன்றதொரு நேரத்தை திரும்பக் கொண்டுவர முடியாது. கடந்த காலம் என்பது கடந்துவிட்ட காலம்தான்.

அப்படியானால் உலகில் நேரம் மட்டும்தான் பெறுமதியானதா? என்னைக் கேட்டால் நேரத்தின் பெறுமதிக்குச் சமனாக நம்முடைய அனுபவங்களையும் உணர்வுகளையும் பெறுமதியுடையவையாகச் சொல்வேன்.

நேரம் என்று எடுத்துக்கொண்டால் இந்த நொடி திரும்ப வராவிட்டாலும் கூட இன்னொரு நொடி வரும் என்பதால் செய்யத் தவறிய வேலைகளைச் செய்துகொள்ள முடியுமாக இருக்கும். ஆனால் வாழ்க்கையில் சில அனுபவங்களையும், சில உணர்வுகளையும் அனுபவிப்பதற்குத் தவறிவிட்டால் அந்த அனுபவங்களும் உணர்வுகளும் திரும்ப கிடைக்கவே கிடைக்காது.

சில அனுபவங்கள் திரும்பக் கிடைக்காது என்று சொல்லும் போது உங்களால் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். உணர்வுகளும் அதே போன்றவைதான். உணர்வுகள் மனதிலிருந்து வருபவை என்பதால் எந்த வயதிலும் உணர்வுகளை உணரலாம் என்று சொன்னாலும் நிறைய உணர்வுகளை அந்தந்த காலகட்டத்திலேதான் நம்மால் பெற்றுக்கொள்ள முடியும்.

உதாரணமாக, முதல் முறையான காதலின் போது வருகின்ற உணர்வுகள் ஒரு வயதிற்கு மேல் வரும் அடுத்தடுத்த காதலில் இருக்காது. முதல் காதல் எதுவுமறியாமல் எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஒர் வித்தியாசமான உணர்வாக இருக்கும். அந்தக் காதல் பெரும்பாலும் தோல்வியில் முடிவடையும். அந்தத் தோல்வியை நினைத்துக் கவலைப்படாமல் இனிமையான உணர்வுகளை எடுத்துக்கொண்டு கடந்துவிட வேண்டும்.

அதே போன்று நாம் சிறு வயதாக இருக்கும் போது கிடைக்கும் வித்தியாசமான உணர்வுகளை வளர்ந்த பின்னர் அனுபவிக்க முடியாது. உதாரணமாக பள்ளிக்கூடத்திற்கு சென்ற ஆரம்ப நாளிலும் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு வந்த இறுதி நாளிலும் இருந்த உணர்வுகள் எப்போதும் கிடைக்காது. இளமையில் கிடைக்கின்ற உணர்வுகளை முதுமையில் அனுபவிக்க முடியாது. முதல் காதல் போன்றே முதலாவதான எல்லாவற்றிலும் கிடைக்கின்ற உணர்வுகள் வித்தியாசமானவையாக இருக்கும்.

அதனாலே அனுபவங்களைப் போலவே உணர்வுகளையும் உணர்ந்து இரசித்து இனிமையான நினைவுகளாக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். நமது வாழ்க்கையில் ஒரு தடவை தவற விட்டுவிட்டால் திரும்பக் கிடைக்காத அனுபவங்களும் உணர்வுகளும் பல.

இன்றைய நாட்களில் நிறைய மனிதர்கள் மொபைல், இணையம், சமூகவலைத்தளங்கள் போன்ற தேவையில்லாத பல விடயங்களில் நேரத்தை செலவு செய்கிறார்களே தவிர நிஜ வாழ்வில் கிடைக்கின்ற அனுபவங்களையும் உணர்வுகளையும் அனுபவிக்கத் தவறுகிறார்கள். இன்னும் சிலரோ நேரத்தைச் சேமிக்கின்றேன் என்ற பெயரில் எவ்வித அனுபவங்களையும் உணர்வுகளையும் பெற்றுக்கொள்ளாமல் வேலைக்குள்ளேயே சென்றுவிடுகிறார்கள்.

அப்படியில்லாமல் நமக்கு உள்ள நேரத்தை நல்ல நல்ல அனுபவங்களை பெற்றுக்கொள்வதற்கும் உணர்வுகளை இரசிப்பதற்கும் பயன்படுத்துவதில் தவறில்லை.

நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் அந்தந்த காலகட்டத்தில் கிடைக்கின்ற அனுபவங்களையும் உணர்வுகளையும் தவிர்க்காமல் அனுபவித்துக்கொள்ள வேண்டும். அவற்றினால் நமது மனதையும் வாழ்வையும் இனிமையான அனுபவங்களாலும், உணர்வுகளாலும், நினைவுகளாலும் நிரப்பிக்கொள்ள முடியுமாக இருப்பதோடு நமது வாழ்வை அர்த்தமுள்ளதாக்கவும் முடியும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading